யசோதை மட்டும்தான் வாயில் வையகம் கண்டாளா? நாம் பார்த்த சினிமா, கேட்ட கதைகளில் யசோதை ‘க்ருஷ்ணா, மண்ணைத் தின்றாயா?” என்று கேட்டதற்கு , கண்ணன் இல்லை எனத் தலையாட்ட, அவள் ‘ வாயைக் காட்டு” என்றதற்கு, வாயைக் காட்ட, அண்ட சராசரங்களும் அதில் கண்டதாக கதை உண்டு. மண்ணை ( பூமியை) விழுங்கினாயா? என்ற கேள்விக்கு ‘இல்லை’என்ற பதில் ‘பூமி மட்டுமல்ல; அனைத்தையும் விழுங்கினேன்’என்ற பொருளில் தலையசைத்ததாகவும், வாயில் அனைத்தயும் உண்டதைக் காட்டியதாகவும் ஒரு பொருள் சொல்லுவார்கள்.

பெரியாழ்வார் பாசுரத்தில் ,

“கையும் காலும் நிமிர்த்திக் கடாரநீர்பையவாட்டி் பசுஞ்சிறு மஞ்சளால் ஐயநாவழித்தாளுக்கு ஆங்காந்திடவையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே” என்பதன் அடுத்த பாசுரம்

“வாயில் வையகம் கண்ட மடநல்லார்ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயச்சீருடை பண்புடைப் பாலகன்மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே”

என்று செல்கிறது. கண்ணனுக்கு நீராட்டுகையில் வாயினை வழித்த அனைத்து மாதர்களும் வாயில் வையம் கண்டனர். சித்தப்பாவிடம் இதற்கு , பல ஆண்டுகள் முன்பு விளக்கம் கேட்டேன்…

வழக்கம்போல் எதோ ஒரு உறவு திருமணத்தில் அவர் ஒரு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்கையில்…அவர் கண்களை மூடியபடி “” அவனுக்கு பணிவிடை செய்யற எல்லா ஆய்ச்சியரும் யசோதைதான். எல்லா ஜீவாத்மாவும் அவனுக்கு ஒண்ணுதான். இன்னார் அடுத்தார், இன்னார் சிறியார்னு அவனுக்குக் கிடையாது. யாரு கண்டா? நமக்கே ஒரு காலம் எதாவது சிறுபிள்ளை வாயில காட்டுவானோ என்னமோ?” என்றார்.

‘இன்னொண்ணு’ என்றார் தொடர்ந்து ” டேய்!, அமலானாதிபிரான் பாசுரம் தெரியுமா உனக்கு?” “தெரியும் சித்தப்பா”

” ரெண்டு தனியன் உண்டு. அதுல ரெண்டாவது தமிழ். சொல்லு பாப்போம்” ‘என்னடா இது?’ என்று திகைத்தாலும் , சொன்னேன்.

“காட்டவே கண்ட பாத கமலம், நல்லாடை உந்தி

தேட்டறு உதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்…”

“ஆங்! உன் கேள்விக்கு பதில் அதுல முதல் அடியிலயே இருக்கு பாரு. ‘காட்டவே கண்ட பாதகமலம்’. அவன் விருப்பப்பட்டு தன் உருவத்தை அங்கம் அங்கமா அவருக்குக் காட்டினான். அவரும் எழுதினார். அதுமாதிரி, அவன் விருப்பம் – நா வழித்த ஒவ்வொரு ஆய்ச்சியும் வாயில் வையகம் கண்டாள். ஸ்வாதந்தரியம் அவனுக்கு மட்டுமே உண்டு. நாச்சியாரே என்ன கேக்கிறாள் ? கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ? அவளே கேட்டுத் தெரிஞ்சிக்கணும். ஆனா, அவன் விருப்பப்பட்டா, ஒண்ணும் தெரியாத் ஆய்ச்சியருக்கே வாயில உலகம் தெரியும்”

இதுவரை நான் வியந்தவர்களின் வாய்களில் பல இருண்ட குகைகளாக மட்டுமே இருந்திருக்கின்றன.

Leave a Reply